விதை முளைக்க வேண்டும்.

விதைகள் கேட்கும் நண்பர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழைமை அன்று விதைகள் அனுப்புகிறோம். சில வாரங்கள் வியாழன் அன்று அனுப்ப இயலுகிறது. புதன்கிழமை விதை அனுப்ப செவ்வாய்கிழமைக்குள் நண்பர்கள் விலாசம் அனுப்பினால் புதன் அன்று அனுப்ப இயலுகிறது. போன் எடுக்காத சூழலில் வாட்ஸ்அப் மூலம் தகவல் கொடுத்திடவும். பெயர் விலாசம் தேவைப்படும் விதைகள் தொடர்பு எண்ணை அனுப்பினால் எங்களிடமுள்ள காய்கறி விதைகளில் விதைப்பெருக்கம் செய்திட மட்டும் 10,20 விதைகள் தந்து வருகிறோம்.
நீங்கள் விதைகளை எங்கே சேகரித்தாலும் விதைப்பதற்கு முன் சில விசயங்களை செய்திடுவது நலம்.
விதைகளை முந்தைய நாள் எடுத்து வெளியில் காய வைத்து விடுங்கள். (வீட்டிற்குள்ளே கூட) மாலை முதல் காலை 10மணி வரை காய விடுங்கள்.
தக்காளி, கத்தரி,மிளகாய் போன்ற நா்று விடும் விதைகளை அரை மணி நேரம் வரையிலும்,
வெண்டை,கொத்தவரை,காராமணி போன்று சிறிய அளவு விதைகளை ஒரு மணி நேரம் வரையிலும்,
பாகல்,புடலை,சுரை,பூசணி போன்ற விதைகளை ஆறு மணி நேரம் வரையிலும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு விதைக்கவும். கொடி காய்கறி விதைகளை ஆறு மணி நேரம் ஊற வைத்து பிறகு முளைகட்டி வைத்து விதைக்கலாம். அல்லது ஈரமணலில் ஊறவைத்து முளைப்பு வந்ததும் விதைக்கலாம்.  பஞ்சகவ்யம்,கோமயம் போன்றவற்றில் விதை நேர்த்தி செய்வதாக இருந்தால் 100மிலி தண்ணீருக்கு 3மிலி என்ற அளவில் பஞ்சகவ்யம் அ கோமயத்தை கலந்து அவற்றில் விதைகளை ஊற வைத்து விதைக்கலாம். அகத்தி,பாகல் போன்ற விதைகளை பாலில் ஊறவைத்து விதைக்கலாம். முருங்கை விதைகளை 48மணி நேரம் வரையில் ஊறவைத்து விதைக்கலாம். சரியான முறையில் விதைகளை முளைக்க வைக்க நிறைய யுக்திகள் உள்ளன.. விதைகள் முளைக்கவில்லை என்றாலே அது மரபணு மாற்றப்பட்ட விதையாகவோ ஹைப்ரிட் விதைகளாகவோ இருக்கலாமென நிறைய பேர் பேசிக்கொள்வதை கேட்டிருக்கின்றோம். விதை உறக்கநிலையில் இருக்கலாம். வெப்பமான இடத்தில் விதைகள் இருந்திருக்கலாம். விதைகளை எடுத்து காயவைக்கும் போது அதிக நாள் காயவைக்கப்பட்டிருக்கலாம். உச்சி வெயிலில் காய வைக்கப்பட்டிருக்கலாம். சித்திரை மாத அக்னி நட்சத்திர காலங்களில் விதைகள் காயவைக்கப்படிருக்கலாம். விதைகளை காலை 9-10 மணி வரையிலும் மாலை 3-4மணிக்கு மேலேயும் காய வைப்பது நலம். விதைகளில் ஏறக்குறைய 8% ஈரப்பதம் இருக்கவேண்டும் என்பார்கள். அது எவ்வாறு கணக்கிடுவது என நமக்கு தெரியாது.ஆனால் மேற்கூறிய விசயங்களை தெரிந்துகொள்வதன் மூலம் விதைகளை சரியான ஈரப்பதத்துடன் பாதுகாக்க முடியும். நாற்று நடவு செய்யும் விதைகளை விதைத்த பின் மூடி வைப்பதன் மூலமும் விதைகள் முளைத்து வர ஏதுவான சூழலை உருவாக்கிட முடியும். வீடுகளில் தோட்டம் போடுவோர் விதைத்த பின் விதைத்த இடத்தை தென்னை மட்டைகளையோ அல்லது அட்டைகளையோ கொண்டு மூடிவிடலாம். ஒருவேலை நாம் விதைகளை காய்களிலிருந்து எடுக்க நினைக்கிறோம் என்றால் விதைகளை எடுத்து தண்ணீரில் போட்டால் தண்ணீரில் மூழ்கும் விதைகள் தரமான விதைகள் என்றும் மிதக்கும் விதைகள் உள்ளே சோறு இல்லாத தரமற்ற விதைகளாகவும் கருதப்படும். அதனால் மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு ஏனைய விதைகளை சேமிப்பது  நலம். காராமணி விதைகளில் வண்டு அதிகம் தாக்கப்பட்டு இருக்கும். அதனால் அவ்விதைகள் முளைக்காது என அர்த்தமில்லை.. வண்டு விழுந்த விதைகள் முளைக்காது என தோட்டத்தில் தூக்கிவீசி அதில் மழை பெய்து அவ்விதைகளில் பெரும்பாலானவை முளைத்துவந்ததை நேரடியாக கண்டோம். விவசாயம் செய்திட வளமான மண்ணும் தரமான மரபு விதைகளும் அவசியம். அவ்விதைகள் சில சமயம் முளைக்காது போகுமானால் அதற்கு உரிய தீர்வுகளை காண்பது மிக அவசியம். விதைகளை பாதுகாப்பதன் அவசியத்தை அறிந்து கொள்வதுடன் பாதுகாப்பு முறைகளையும் கற்றுக்கொள்வது அவசியம்.

நன்றி பரமு

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY