மண்ணை வளப்படுத்தும் பலதானிய விதைகள்
பலதானிய விதைப்பு – மண் வளத்தை மீட்டெடுக்கும் எளிய வழி இன்று பல விவசாயிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மண் வளம் குறைவது. பல ஆண்டுகளாக இரசாயன உரங்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தி வருவதாலும், மண்ணில் கரிமப் பொருட்களை சேர்க்கும் பழக்கம் குறைந்ததாலும், பல இடங்களில் மண் தனது இயற்கை வளத்தை இழந்து வருகிறது. இதன் காரணமாக மண் இறுகுதல், நீர் பிடிப்புத் திறன் குறைதல், மண்புழுக்கள் மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் குறைதல் போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற நிலங்களை மீண்டும் வளமாக மாற்ற உதவும் இயற்கை வேளாண் முறைகளில் முக்கியமானது பலதானிய விதைப்பு (Multi-Species Cover Cropping) ஆகும். நம் முன்னோர்கள் மண்ணை வளமாக வைத்திருக்க இலைதழைகள், கால்நடை எரு மற்றும் பசுந்தாள் உரங்களை மண்ணில் சேர்த்து உழவு செய்தனர். அதனால் மண் உயிரோட்டமாக இருந்தது. இன்று அந்த நடைமுறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டன. அந்தக் குறையை ஈடுசெய்யும் ஒரு எளிய வழியாக பலதானிய விதைப்பு முறை பயன்படுகிறது. இந்த முறையில் ஒரே வகை விதையை விதைப்பதற்குப் பதிலாக, தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பசுந்தாள் உ...