தாய் வித்து

ஒரு பெண் காப்பாற்றப்படுவாளாயின், ஒரு சந்ததியே காப்பாற்றப்படுவதாக நாம் சொல்வதுண்டு. நம் சமூகம் தாய்வழி சமூகம் என்றும், தாய்த்திருநாடு; தாய்மண் என இயற்கையை பெண்ணாகவே நாம் வணங்கி வருகிறோம். அதன் தொடராக நாம் இங்கு பகிரவிருப்பதும், பிறப்பின் போதே கருவை சுமந்துகொண்டு பிறக்கும் "விதைகள்" பற்றியே. அதிலும் குறிப்பாக பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்கு முன்பிருந்தே இங்குள்ள இயற்கையின் சூழலில் வாழ்ந்து இங்குள்ள அனைத்து தட்பவெட்ப சூழலுக்கும் ஏற்றபடி தங்களை தகவமைத்து வாழக்கற்றுக்கொண்ட மரபு விதைகளை பற்றி பேசவிருக்கிறோம். இயற்கையின் படைப்பில் ஒரு அற்புதம் என்றால் அது முன்னேற்பாடு என்றே கூறலாம். மனிதன் இந்த உலகில் வாழ வேண்டுமானால் அவன் வாழ்வதற்கு தேவையான அனைத்து சூழலையும் இயற்கையே ஏற்படுத்திய பின்னரே மனிதன் என்ற உயிரினத்தை உருவாக்குகிறது. மனிதனின் பிறப்பிற்கு முன்பே மற்ற பறவைகளும் விலங்குகளும் இவ்வுலகில் தோன்றி அவைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த இயற்கை சூழலில் வாழ்ந்து அங்குள்ள தாவரங்களின் இலைகளையும் காய்களையும் பழங்களையும் உணவாக உட்கொண்டு தான் உண்ணும் பழங்களின் விதைகளை தன்னை அறியாதே விதைத்து விவசாயம் செய்து கொண்டிருந்ததை கடைசியாக உருவான மனித உயிரினமும் தொடர்ந்தது. மனிதனுக்கு தேவையான அனைத்து சூழலும் இயற்கையில் இருக்க, தனக்கான உணவு இதுவென்று அறிந்து அவற்றை தனக்காக உற்பத்தி செய்து கொள்வதற்காக காட்டை அழித்து விவசாயம் என்று தனித்து செய்தபோது இயற்கையின் விவசாயமும் மரபு விதைகளும் அழிவதற்கான ஆரம்பம் எனலாம். இன்றைய மனிதன் தானும் இயற்கையின் ஒரு அங்கம் என்பதை மறந்து, இயற்கையை அழிக்க ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களும், இயற்கையை காக்க ஒரு குறிப்பட்ட சதவீத மக்களும் புறப்பட்டபோதும், இரண்டாம் முறையாக இயற்கையின் விவசாயமும், அந்தந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்த மரபு விதைகளும் இரண்டாம் முறையாக அழிய தொடங்கியது. காப்பதற்கான மக்களை விட அழிப்பதற்கான மக்களும், அவர்களின் வேகமும் அதிகமாக உள்ளதை அனைவரும் அறிவோம்.
இன்றைய தினத்தில் இக்கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், இயற்கை மனிதனுக்காக உருவாக்கி வைத்திருந்த இயற்கை சூழலும், பல லட்சம் மரபு விதைகளும் அழிக்கப்பட்டுவிட்டது. இன்றும் மனிதனின் கால்தடம் படாத இடத்தில் மரபு விதைகள் வீரியமாக அடுத்த சந்ததியை உருவாக்கிக்கொண்டு தான் இருக்கிறது.
அரசர்களின் ஆட்சியில் இருந்தவரை, வேற்று நாட்டவர் நம் நாட்டிற்குள் வரும் வரை, இங்கு விவசாயம் செய்து வாழ்ந்து வந்த விவசாயிகளிடத்தில் தான் நம் மரபு விதைகளும் வாழ்ந்துகொண்டிருந்தன. விவசாய நிறுவனங்கள் துவங்கப்பட்டதன் பின்னரும் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஏற்படுத்தப்பட்ட பசுமை புரட்சியும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே நம் விவசாயமும், விதைகளும், விவசாயிகளும், விவசாய நிலங்களும், மண்ணின் மைந்தர்களும் காவு கொடுக்கப்பட்டு, மலடாக்கப்பட்டு, மயானங்களாக இன்று காட்சியளிக்கிறது.
மரபு விதை அழிவு என்றால் நாம் உண்ணும் உணவின் ஆதாரமான செடி கொடிகளின் விதைகள் அழிகிறது, அவ்விதைகளை பன்னாட்டு நிறுவனங்கள் தம்வசப்படுத்தியுள்ளன என்ற மேலோட்டமான எண்ணமே எல்லோருக்குள்ளேயும் உள்ளது.

 இங்கு வாழ்ந்து வந்த வீரியமான மனிதனும்,
அவனது கலாச்சாரமும்;
மரபு சார் வாழ்க்கை முறைகளும்,
 தற்சார்பு கிராமங்களும்,
அந்த கிராமத்தில் வழக்கிலிருந்த ஒட்டுமொத்த தொழில்களும்,
இதற்கெல்லாம் ஆதாரமான கால்நடைகளும் அழிக்கப்படுகின்றன. இங்கு யாரெல்லாம் தனக்காக இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்களோ அவர்களெல்லாம் அறிவுக்கூர்மையுள்ள உழைப்பாளிகள். அவர்களின் கடின உழைப்பு பன்னாட்டு நிறுவனங்களின் மேல்தட்டு மக்களுக்கு தேவைப்பட்டுள்ளது. அந்த ஓநாய்களின் ஒட்டுமொத்த குறிக்கோளும் இன்று நிறைவேறியுள்ளது. மேற்சொன்ன அனைத்தும் அழிக்கப்பட்டு இங்கு வாழ வேண்டிய இந்த தலைமுறை அவர்களுக்கு பணி செய்து கொண்டிருக்கிறது. இதுதான் மரபு விதை அழிப்பு எனக்கூறுகிறேன்.
ஒரு சந்ததியை  காக்க வேண்டுமென்றால் அந்த சந்ததியின் ஆதாரமான பெண்மையை காக்க வேண்டும். ஒரு நாட்டை தன்னகத்தே வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அந்த நாட்டின் விதைகளை தன்னகத்தே வைத்திருந்தால் போதும். இன்று நாம் இழந்துகொண்டிருப்பது வெறும் விதைகளை அல்ல, நம் சந்ததிகளின் ஆதார பெண்மையை இழந்துள்ளோம். புரியும்படியாக, நடைமுறையில் உள்ள வழக்கத்தையே கூறுகிறேனே. நம் முன்னோர்கள் வேலிக்குள்ளே வாழ்ந்தவர்கள். அதாவது விவசாயம் என்பது, தங்களுக்காக இருந்த நிலத்தில் தங்களுடைய வாழ்விற்கு தேவையான அனைத்தையும் அமைத்துக்கொண்டு தங்களுக்காகவே முழுமையாக வாழ்ந்தனர் . வேலிக்குள்ளே மனிதனுடன் ஆடு, மாடு , கோழி, மரங்கள் , செடிகொடிகள் என அனைத்து உயிரினங்களும் வாழ்ந்தன. அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு தேவையான சூழல் இருந்தது. அந்த வாழ்வியல் முறையில் இயற்கையின் ஒரு பகுதியாக மனிதனும் இருந்தான் . இவ்வாறான தற்சார்பு விவசாய முறையில் அந்த வேலிக்குள்ளே வாழ்ந்த மண், மனிதன், கால்நடைகள் இவ்வனைத்தும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுப்பயிர்கள், உயிர்வேலிகளும் (புகலிடம்) அந்த புகலிடத்தில் வாழ்ந்த அனைத்து ஜீவராசிகளும் வீரியமான விதையாக வாழ்ந்தன. இந்த ஒட்டுமொத்த வீரிய மரபு விதைகளும் இன்று அழிக்கப்பட்டாயிற்று.. இந்த கட்டமைப்பு ஒரு தோட்டத்தின் அமைப்பு , ஒரு விவசாயியின் வாழ்க்கை முறை. இவ்வாறாக கோடிக்கணக்கான தற்சார்பு விவசாயிகளின் வீரியமான வித்துகள் அழிக்கப்பட்டிருக்கிறது.  இவ்வாறாக வாழ்ந்தபோது யாரும் மரபு விதைகளை சேமிக்க தனியாக அலைந்ததில்லை. எல்லா விதைகளும் ஒவ்வொருவரின் கிராமத்திலும் இருந்தது. ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு விவசாயியிடம் விதை இல்லையென்றால் அருகிலிருக்கும் விவசாயியிடம் விதைகளை பெற்றுக்கொண்டோம். கோவில் திருவிழாக்களை நடத்தி முளைப்பாரி எடுத்து அந்த கிராமத்தில் இருந்த உணவுப்பயிர்களின் வீரிய விதையை அடையாளம் கண்டு அனைவரும் பகிரந்து கொண்டனர். இவ்வாறான கோவில் திருவிழாக்களின் மூலம் கால்நடைகளின் வீரியத்தையும் அறிந்து அந்தந்த பகுதிகளின் வீரிய வித்துகள் அனைத்தும் பாதுகாப்பாக வாழ்ந்து வந்ததை அனைவரும் அறிவோம்... ஆனால் பசுமை புரட்சி எனும் பெயரால் ஒரு பயிர் சாகுபடி கொண்டு வந்ததன் விளைவாக தாம் பயிரிட்டதை இடைத்தரகர் கடைக்கு கொண்டு வந்த விவசாயிகளுக்கு ஆரம்பத்தில் பணம் கிடைத்திடவே தான் வாழ்ந்து வந்த அனைத்து சூழலையும் அழித்து ஒரு பயிர் சாகுபடிக்கு மாறினான் . விளைபொருட்களை வாங்கி விற்ற வியாபாரிகளால் அதிக நாட்கள் காய்கறிகளை சேமித்து வைக்க இயலாததால் மரபு விதைகள புறக்கணித்து தாங்கள் சிபாரிசு செய்யும் அதிக நாட்கள் சேமித்து வைக்கும் ஒட்டுரக விதைகளை விவசாயிகளுக்கு கொடுத்திட, பணம் வருவதால் விவசாயிகளும் தங்களுடைய விதைகளை புறக்கணித்ததன் விளைவாக உணவுப்பயிர்களின் மரபு விதைகள் மறக்கடிக்கப்பட்டது.
இன்றைய பொழுதில் விவசாயி என்பவர் ஒரு பயிரின் மீது முதலீடு செய்கிறார். என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதை இடைத்தரகர் முடிவு செய்கிறார்; எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பதை அங்கே விஷங்களையும் உப்பையும் விற்கும் வியாபாரி முடிவு செய்கிறார். விழிப்பு இல்லா விவசாயி வீரியமில்லாத பயிர்களின் உணவுகளை உட்கொண்டதாலும், வெண்மை புரட்சியின் பலனாக கிடைத்த கொழுத்த மாடுகளின் பாலினையும் உணவாக எடுத்துக்கொண்டு தன் வீரியத்தை இழக்கின்றார்.

வீரர்களாக நெஞ்சு நிமிர்ந்து நின்ற அவ்விவசாயி இன்று வயிறு பெருத்து தன் வீரியம் இழந்துவிட்டார்.
இன்று மண் மலடாயிற்று,
மனிதன் மலடானான்,
கால்நடைகள் இல்லை,
வேலியில் உயிர் இல்லை,
அங்கே வாழ்ந்த உயிரினங்கள் இல்லை. ஒட்டுமொத்த வீரிய விதைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் கலப்பினமாக வலம் வருகின்றன..
இந்த கட்டமைப்பு உடைக்கப்பட்டதன் விளைவாக தன் அடுத்த சந்ததியாவது நலமாக இருக்கட்டுமென்று ஆங்கில கல்வியை கற்க வைத்து இன்றைய தலைமுறையை நாடுகடத்தியாயிற்று. பன்னாட்டு நிறுவனங்களில் வேலையாம் .. நாம் முன்னரே சொன்னதன்படி பன்னாட்டு நிறுவனங்களின் கையிலிருக்கும் அனைத்து விதைகளும் மலடாக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது.
இங்கு யாரும் விதைகளை தொடர்ந்து சேகரிக்க வேண்டியதில்லை. அவரவர் தனக்காக வாழத்தொடங்கும்போது தன்னைபோன்று இங்கு வாழ்ந்த அனைத்தையும் தன்னகத்தே கொண்டு தன்னை சுற்றி தனக்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளும்போது மரபு விதைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விடும். இங்கு இது தான் பிரச்சனையாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் விதைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதென்னவோ உண்மை தான். ஆனால் முழுமையாக எதையும் அழித்துவிடவில்லை. எந்த விதைகளையெல்லாம் எடுத்துச்சென்றனரோ, அந்த விதைகளெல்லாம் இம்மண்ணில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. நம்மால் தான் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. மரபு விதைகள் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டதென்ற பிம்பத்தை மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டனர் . வேறு வழியில்லை, நிறுவனங்களின் விதைகளைத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற போலி சூழலை உருவாக்கிக்கொண்டுள்ளனர். கடந்த தலைமுறை விவசாயிகள் இதில் ஊறிப்போய் விட்டதால் அவர்களுக்கு எடுத்துக்கூறி புரியவைப்பதில் சிக்கல் உள்ளது. விழிப்போடு வரும் இந்த தலைமுறை விவசாயி மற்றும் மரபை போற்றும் முன்னோர்களின் உதவியோடு தங்களுடைய பகுதிகளில் புழக்கத்தில் உள்ள மரபு பயிர்களையும் விதைகளையும் கால்நடைகளையும் அடையாளம் காணவேண்டியுள்ளது. ஆனால் யாரோ ஒருவர் நமக்கான விதைகளை சேகரித்து வைத்திருந்து பாதுகாத்து தர வேண்டுமென விரும்புகிறோம்.. வீடு தோறும் விதை வங்கி வேண்டும். கிராமம் தோறும் விதை வங்கி வேண்டும். இவ்வாறாக நமக்கான விதைகள் நம்மகத்தே இருக்குமாயின் எங்கேயும் தேடிச்சென்று சென்று விதைகளை வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. தற்போது நிறுவனங்கள் கொடுக்கும் விதைகளால் நமக்கு மிகப்பெறும் பொருளாதார இழப்பு வந்துகொண்டே உள்ளது. அவர்கள் விவசாயிகளின் மீதோ அவர்கள் உற்பத்தி செய்யும் உணவின் மீதோ அதை உண்ணும் மக்கள் மீதோ அக்கறை கொள்ளவில்லை. விவசாயி-உணவு-மக்கள் என்ற பிணைப்பின் சங்கிலியாக செயல்பட்டு இவற்றின் முழு ஆதாரங்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு எவ்வாறு பணம் ஈட்டலாம் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கின்றன.

 உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளி விதையின் விலை 10கிராம் 360₹,ஒரு கிலோ தக்காளியின் விதை 36,000₹. ஒரு கிலோ தக்காளி விதையை எடுக்க 30கிலோ தக்காளி செலவாகுமென வைத்துக்கொள்வோம். ஒரு கிலோ தக்காளியை 10₹க்கு வாங்குகிறார்கள் என்றால் 30கிலோ தக்காளியின் விலை 300₹ என்றால் ஒரு கிலோ தக்காளி விதையின் விலை 300₹ ஆனால் நாம் கம்பெனியை நாடினால் அவர்கள் நம்மிடம் நமக்கே தெரியாது பிடுங்கும் பணம் 35700₹ அதிகம். இது ஒரு சான்று மட்டுமே. ஒரு கிலோ பப்பாளி விதையின் விலை ஒன்றரை லட்சம் என்றால் நம்ப முடிகிறதா! ஆனால் இவ்வாறான பழங்களிலிலிருந்து நாம் விதைகளைப்பெற இயலாது, அல்லது மலட்டுத்தன்மை கொண்ட விதையாக உள்ளது. இது பொருளாதார இழப்பை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை உணர முடிகிறது. நம் பெண்டிர் சாதரணமாக பத்து இருபது குழந்தைகளை பெற்றவர்கள், ஆனால் இன்று வீதி தோறும் உள்ள குழந்தை பிறப்பிற்கான மருத்துவமனைகள் தான் நம் பெண்கள் குழந்தை பிறப்பை தீர்மானிக்கின்றன.. நாம் உண்ணும் மலட்டுத்தன்மையுள்ள உணவுகளே நம் உடல்நலத்தையும் தீர்மானிக்கின்றன. கடைசியாக ஒரு விசயம், ஒரு நாட்டை அடிமையாக்க வேண்டுமென்றால் அந்த நாட்டுடன் போர் புரிவது அந்தக்காலம் , அந்த நாட்டின் விதைகளை தந்திரத்தில் இருந்தால் அவற்றின் மரபணுவில் குறிப்பிட்ட விசயத்தை செய்வதன் மூலம் அந்த உணவுப்பயிரை உண்ணும் மனிதன் கால்நடைகள் போன்றவற்றை உடல்சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்திட முடியும். அதே சமயம் அந்த நோய்க்கான மருந்து தன்னிடம் மட்டுமே உள்ளதென்று அந்த நாட்டினை சுரண்டிடவும் முடியும். இவ்வாறு அனைத்து ஆயுதங்களாகவும் இந்த விதைகளை பயன்படுத்த இயலும். இந்த ஆயுதத்தை விவசாயிகளாகிய போர்வீரர்கள் தன்கையில் வைத்திருந்தாலன்றி அடுத்தடுத்து ஏற்படும் இன்னல்களிடமிருந்து மீண்டு வர இயலாது.. தொலைத்துவிட்ட நம் உணவுப்பயிர்களின் விதைகளை எங்கெல்லாம் சேகரிப்பது , எப்படியெல்லாம் பக்குவப்படுத்தி சேமித்துக்கொள்வது என்பதை இனி காண்போம்.

வானக_இதழுக்காக..

-பரமு

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY